Powered By Blogger

27 ஏப்ரல், 2021

தெய்வமாகும் மதுப் பிரியர்கள்

 




அப்பா
ஒரு மொடாக் குடிகாரர்
தினம் தினம்
கள்ளோ விஷம் கலந்த சாராயமோ மதுக்கஷாயமோ
அவரது பானம்

நள்ளிரவில்
தள்ளாடித் தள்ளாடி வரும்
அப்பாவுக்கு சுடுசாதம் போட
எத்தனிக்கும் என் அம்மாவின்
பரிதவிப்பை பாசம் என்பதோ, பயம் என்பதோ?
தொட்டுக் கொள்ள
உணக்கையாயில்லை என
அடித்து உதைத்து எல்லோரையும் சிதறடிப்பார்

என்னை பக்கத்து வீட்டு
மீசை மாமா மாரியப்பனின் மனைவியும்
ஒன்றரை வயது என் தம்பியை
எதிர் வீட்டு அரிசிக் கார அம்மாவும்
தஞ்சம் தந்து ஆதரிப்பார்கள்

அம்மாவோ
கிணற்றடியில் தண்ணீர் தொட்டிக்குப் பின்னால்
ஒளிந்து கொண்டு இரவைக் கடப்பாள்...
பண்டிகை நாட்களில்
விடிந்ததும் காணாமல் போகும் அப்பா
மறுநாள் சாமத்தில் வருவார்
தெருக் குழந்தைகள்
கொண்டாட்டத்தை ஏக்கமாய்
பார்த்து தம்பி உறங்கியே விடுவான்

எனக்குள் பொதிந்த ஏக்கங்களை
என் மௌனம் கொண்டு 
மென்று விழுங்கி மூலையில் தஞ்சமடைவேன்.

எங்கள் வீட்டில் 
நாட்களும் மாதங்களும் ஆண்டுகளும்
கரிய நாட்களாகவே கிழித்தெரியப்படும்

இப்படியாக...

... ... ... ... ... ... ... ... ...

என் பதினோறாம் வயது...
ஆறாவது படித்த சமயம்
அப்பாவை பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள்
அவருக்கு ஈரல், குடல் யாவும்
சாராயம் அரித்துப் போனதாக
சித்தப்பாவும் பெரியத்தானும் பேசிக் கொண்டார்கள்

ஓர் அதிகாலைப் பொழுதில்
பெரிய அத்தானும்
என் சித்தப்பா சின்னம்மா மூவருமாக
என்னை வாரிக் கட்டிக் கொண்டு அழுதார்கள்
என் அப்பா செத்து விட்டாரென்று...

வாழ்ந்த கொஞ்ச நாளிலும்
அப்பாவின் நல்ல முகத்தை 
ஒரு நாளும் காணாத எனக்கு 
ஏனோ அழுகையே வரவில்லையே!

உற்றார் உறவினர் ஒப்பாரி ஓலங்களை
வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்...
தம்பியோ வெற்று சிகரெட் அட்டையில் 
ரயில் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்

எங்கள் இருவருக்கும் அது 
வழக்கமாய் வந்து போன நாளாய் போனது

ஆண்டுகள் பல கடந்தன...

வீட்டில் சுடும் இட்லியைக் கூட
அப்பாவின் படத்தின் முன்பாக
படையலிட்டு நீர் விளாவி
திருநீறு பூசிய பின்னரே
பரிமாறுவாள் அம்மா...

எவனோ ஒரு சாமியாடி சொன்னானாம்
அப்பா இந்த வீட்டில்
தெய்வமாய் இருக்கிறார் என்று!

மதுப் பிரியர்கள் 
தெய்வமாகி விடுகிறார்கள்,
செத்துப் போனபின்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக