Powered By Blogger

20 ஜூன், 2023

மனிதம் சிறக்க திருக்குறள்

திருக்குறளை ஆழ்ந்து படிக்கும் வாய்ப்பு என் அகவை அறுபதைத் தொடும் இத்தருணத்தில் தான் எனக்கு முழுமையாக அமையப்பெற்றது.

பள்ளிப் பருவ காலத்தில் 'அகர முதல' எனத் தொடங்கி மனப்பாடச் செய்யுளாக சொற்ப எண்ணிக்கையிலான குறள்களைப் படித்ததோடு சரி. மனதினுள் குறள் பொதிந்த அளவிற்கு அதன் பொருள் பதிந்திடாத நிலையோடு கடந்த காலம் அது. இளம் வயதில் ஒரு கட்டத்திற்கு மேல், பல திசைகளில் இருந்தும் திருக்குறள் சார்ந்த ஆக்கங்கள் நம்மைக் கடந்து பயணித்ததை மறக்கவியலாது.

அந்நாளில், எங்கிருந்தாவது குறளோ அல்லது குறள் சார்ந்த படைப்போ நம் புலன்களைத் தழுவாது இருந்ததில்லை எனலாம்‌.

திருக்குறள் எனும் ஈரடிச் செய்யுள் இவ்வுலகின் எல்லா அக மற்றும் புறவெளிகளிலும் செலுத்திய ஆளுமை, தமிழனின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றது.

திருக்குறள், சங்க இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்கள் திரட்டிற்குட்பட்ட குறள் வெண்பா வகையினாலான 133 அதிகாரங்களாகவும், ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுட் பாக்கள் வீதம், ஆக 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டதாகும். திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பால் பகுப்புகளாக அமையப்பெற்றுள்ளது. திருக்குறள் மானுடவியலின் அறநெறிகளை நீக்கமற வலியுறுத்தியும் வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பகுத்து சொல்லப்பட்ட மிகவும் தொன்மையான பெருமை மிகும் படைப்பாகும்.

இந்நூல், பொதுத் தன்மையோடும் மதச்சார்பற்றதுமான தன்மையுடையதாகக் கருதப்படுவதே இதன் சிறப்பம்சமாகும். இத்தகு சிறப்புடைய குணநலன்களால் தான் திருக்குறள் உலகில் பொது மொழியான ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இன்று வரையிலும் உலகெங்கிலும் புகழ் பெற்ற ஒரே நூலாகத் திகழ்ந்து வருகின்றது.

உலகமே போற்றும் திருக்குறளை தமிழராகப் பிறந்திருந்தும், இளம் வயதில் ஐயமறக் கற்காததால் நாம் இழந்தவை குறித்து மனம் வருந்துவதை மறுக்க இயலாது.

சரி, போகட்டும்; இப்போதாவது அதை முழுமையாகக் கற்கவும் ஆராய்ந்தறியவும் வாய்ப்பு கிட்டியது குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

திருக்குறளுக்காக உரை எழுதிய அறிஞர் பெருமக்கள், திருக்குறள் சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட பேரறிஞர்கள், திருக்குறளை மையமாக வைத்து பல்கலைப் படைப்புகளை உலகுக்குத் தந்த பெருமை மிகும் படைப்பாளர்கள், இசை வடிவம் தந்த கலைஞர்கள், பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகெங்கிலும் திருக்குறள் பெருமையை பறை சாற்றிய உலகளாவிய பெருமக்கள் அனைவரையும் வியந்து நோக்குகிறேன்; அளவிடற்கரிய சாதனைகளுக்காக அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

முதன்முதலில் ஒரு குறளை எப்போது படித்தோம் என்பது நினைவில் இல்லை. ஒவ்வொரு குறளும் எங்ஙனம் நம் நினைவில் அகலாது ஒட்டிக் கொண்டு நம்மோடே வாழ்கிறது என்பதை ஆராய்ந்தறியவே இயலாததென்பது வியப்புக்குரியது.

ஒவ்வொரு குறளுமே மனிதகுலத்திற்கான வாழ்வு நெறிமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. மனித சமுதாயத்தின் அங்கங்களான இல்வாழ்க்கை, அரசியல், பொதுவாழ்வு என எல்லாவற்றையும் நெறிப்படுத்தும் வகையில் பாங்காய் அமைந்திருப்பதைப் பார்க்கும் போது, அதை இயற்றி அளித்துள்ள திருவள்ளுவர் எத்தகைய மாண்புமிக்க மனித வடிவம் என்பதை உணரலாம்.

திருக்குறளின் சாரத்தை முற்றாக பிறழ்வின்றி கடைபிடிக்கும் ஒருவரால் இந்த உலகை வெல்ல இயலும் எனில் மிகையில்லை. அத்தகைய ஒருவர் காணக்கிடைத்தல் அரிது என்பதும் வியப்பில்லை. ஏனெனில், நாம் சமுதாய ஒழுங்கு, கலாச்சாரம், பண்பாடு, அரசியல் நேர்மை ஆகியவற்றுள் ஒருவித எதிர்மறை வலைக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். அதனின்று நம்மை விடுவித்துக் கொள்ள இயலா தொலைவில் பயணிக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆயினும், இந்த குறள்கள் தினந்தோறும் நம்மை அழைத்துக் கொண்டு தானிருக்கிறது.

நன்னெறியைப் புகட்டவும், நேரிய வாழ்வு கொள்ளவும், நீதி பிறழாத மனத்தோடு ஆட்சி வழங்கவும், தலைசிறந்த இல்வாழ்க்கையை சிரமேற்கவும் குறள்கள் நம் அருகிலேயே நிலைநின்று குரல் கொடுத்தவாறே நம்மை ஓயாது அழைத்துக் கொண்டிருக்கிறது.

திருவள்ளுவர் வகுத்துத் தந்த பாதையினூடே பயணித்தல் என்பதே நம் இலட்சியத்தை ஈடேற்றும் உன்னத வழியென்றால் அது மிகையில்லை.

வாழ்க திருவள்ளுவர்! வளர்க திருக்குறள் புகழ்!!

புகழ் வளரும்…✍


05 ஜூன், 2023

அரசியல் பேசுவோம்

காலையில் எழுந்தவுடன் குழாயில் தண்ணீர் வரவில்லை. காலைக் கடன்களுக்காக கால் பக்கெட் தண்ணீர் கூட இல்லை.

சரி, சிறிது நேரம் காத்திருக்கலாம் என முகத்தைக் கழுவி விட்டு முகநூலில் சமூகப் பொங்கல்களை ஆற்றலாம் என்று திறந்தால், "விநாயகர் சிலை அகற்றம்", "ஒடிசா ரயில் விபத்து ஒரு சதி" என ஒரேயடியாய் காவிக் கசடுகள் கண்ணைக் கட்டின.

இடையிடையே சேலத்து ஆணவக் கொலை நாயகன் குறித்த அரற்றுதல்கள். அவரை குறிப்பிட்ட சமூகத்தின் ஏகோபித்த காவலராக (மாவீரனாம்: அடேய்!) சித்தரித்து, அவர் மீண்டும் சாமுராய் கணக்காய் வெளியே வந்து சா'தீய' சமூகப் பணி ஆற்றுவார் என ஒரு சாரார் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் தீர்ப்புரை வாசிக்கப்பட்ட போதே அவருடைய சா'தீய' வெறி சரிந்து விழுந்து விட்டது என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை போலும்.

இப்போதெல்லாம் சமூகத்துக்காக பொங்கி முகநூல் வருகிறவர்களில் சாதிக்காகவும் மதத்திற்காகவும் கம்பு சுத்துகிறவர்களே அதிகமாகத் தெரிகிறார்கள்.

சாராயக்கடை துயரத்தைப் பற்றி எழுதினால் இவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்; மதச்சார்பு வெறுப்பு அரசியல் பற்றி எழுதினால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பொதுக்குழு அரசியல் நடத்தி பிழைப்பு நடத்துபவர்களை பற்றிப் பேசினால் அந்த ஆட்கள் என் பொடனியில் அடிக்க வருகிறார்கள்.

பாருங்கள் நடுநிலையானளராக இருப்பதில் எத்தனை கொடுமை என்று, எந்த பக்கம் திரும்பினாலும் குத்து விழுகிறது.

பொதுவாக, அரசியல்வாதிகளை வெறுக்க வைத்தது நான் வேலை பார்த்த துறை தான்; அலுவலகத்துள் வந்த நிமிடத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வரை கறை வேட்டிகளோடு கட்டிப் புரண்டு விட்டு வீட்டுக்கு வந்து தூங்கினால், தூக்கத்தில் அதிகாரிகள் கனவில் வந்து அவர்களும் போதாக்குறைக்கு அரசியல் துவேஷம் செய்வது நினைவிலாடியது.

கம்யூனிச சித்தாந்தம் கொஞ்சம் பிடிக்கும் என்றாலும், இங்கே கம்யூனிஸ்டுகளை பிடிப்பதில்லை (நல்லகண்ணு அய்யா உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர)

என்னை போன்ற நடுநிலையாளர்கள் வேறு என்னதான் செய்வது?

சாதியையும் மதத்தையும் வைத்துக்கொண்டு நாட்டை பாழாக்குபவர்களிடம் விலகிச் செல்வதா? இல்லை, அவர்களிடத்தே போராடிப் பார்த்து விடுவதா?

பலரும் இங்கே, தன் சாதியை உயர்த்திப் பிடித்து தாமே உயர்ந்தவர் என்றும், பிற மதத்தவரை இழிவு செய்வதன் மூலம் நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்துவதாகவும் போலியான சித்தாந்தத்தை வகுத்து வைத்திருக்கின்றனர்.

இதனால், பிரிவினைவாதமும் வெறுப்பு அரசியலுமே ஓங்கி நிற்கிறது.

அதன் விளைவாக எல்லா சமூகமும் நிம்மதியற்றுக் கிடப்பதோடு நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்ற அறிவே இல்லாதவர்களாகத் திகழ்கின்றனர்.

அவர்களுக்கு தம் கருத்தில் நியாயம் தர்மம் இருக்கிறதா இது சமூகவெளியில் அறம் சார்ந்த விளைவுகளை பதிப்பிக்குமா என்பது குறித்தெல்லாம் துளியும் கவலை கிடையாது.

இவர்களுக்கு மத்தியில் யாரையும் தொந்தரவு செய்யாமல் கவிதை இலக்கியம் கலைகள் பெண்கள் குழந்தைகள் கல்வி சுய முன்னேற்றம் சமூக வளர்ச்சி என நேர்மறை பதிவுகளை எழுதி தாம் உண்டு தம் வேலை உண்டு என தன் போக்கில் பயணிப்பவர்கள் மிகக் குறைவே.

அவர்களுமே தப்பித் தவறி அறம் தவறிய சாதிய வெறி மதத் துவேஷம் குறித்து பதிவுகளை எப்போதாவது நேர்மையான வகையில் இட்டால், அவைகளும் மார்க்கின் அறமில்லா அல்காரிதச் சித்தாந்தத்தால் அநியாயமாக கீழே தள்ளப்பட்டு விடுகின்றன.

(இந்தக் கட்டுரையில் கூட நான் community standard -ஐ மீறிய வகையில் எத்தனை வார்த்தைகளை எனக்குத் தெரியாமலே போட்டு இருப்பேன் என்று தெரியாது.)

அடுத்தவர்களின் அழுக்கை விமர்சிக்க வருபவர்கள் அவர்கள் மீது ஒட்டி இருக்கும் அழுக்கைப் பற்றி கவலை கொள்வதில்லை.
அது என்னவோ அவர்களின் தார்மீக உரிமை என்று அழிச்சாட்டியமாய் நின்றாடுகிறார்கள்.

என்னை ஒரு நண்பர் கேட்டார் நீங்கள் இடதா? வலதா? என்று!

நான் சொன்னேன், நான் இடதும் இல்லை வலதும் இல்லை; நடு சென்டர் (!?) என்றேன்.

ஆம். நான் ஒரே அடியாய் வலது பக்கமோ இடது பக்கமும் சாய்பவன் அல்லன். வலதின் அடையாளம் கொண்டவர் அறத்தோடு திகழ்வாறானில் அவரை பாராட்டத் தவறுவதில்லை.

அதேபோல் இடது என தம்மை விளித்துக் கொண்டு களவு செய்வாரானால் அவரைக் கண்டிக்கவும் தயங்குவதில்லை.

அதனால்தான், சொன்னேன் நான் வலதும் இல்லை இடதுமில்லை, நடுவாளன் என்று!

இங்கே சமூக ஊடகங்களில் இது போன்ற நடுநிலை சிந்தை கொண்டவர்கள் நிறைய பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வலது ஆசாமிகளாலும் இடது ஆசாமிகளாலும் மத்தளம் போல் நாளுக்கு நாள் அடிபட்டேக் கிடக்கிறார்கள்.

குறைந்தபட்சம் கருத்து சொல்பவனை வார்த்தைத் தாக்குதலை கொண்டு வீழ்த்த நினைப்பது அறம் கிடையாது.

அவன் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் இருந்தால் நாகரீகமாக எழுத்து வடிவில் முன் வைக்க வேண்டும். அது இயலாது என்றால் திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போய் விட வேண்டும்.

நாம் அன்றாடம் புழங்கும் ஒரு சொல் - "பொது ஜனம்".

இந்தப் பொது ஜனம் என்பது நடுநிலையாளரைத் தவிர வேறு எவரும் இல்லை.

இவர்கள்தான் இடதாயினும் வலதாயினும் தவறுகளை தயக்கமின்றி சுட்டிக் காட்டுபவர்கள்.

இவர்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் காரணிகளை உருவாக்குகிறார்கள்.

இவர்கள் தான் நாட்டின் இறையாண்மையை அறத்தோடு காக்க முயற்சிப்பவர்கள்.

நடுநிலையாளர்களை புண்படுத்தாமல் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

அவர்கள் அமைதியானவர்கள் தான்; ஒரு கட்டத்திற்கு மேல் அந்த அமைதியும் தன் கட்டுடைத்து சீற்றம் கொண்டுவிடும்.

04 ஜூன், 2023

அலட்சியம் ஆபத்து





ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து என்பது மிகக் கொடுந்துயரம்!

இது ரயில்வே துறையின் உச்சக்கட்ட அலட்சியம் தவிர வேறில்லை!

விபத்து நடந்த நேரம் இரவு 7 மணி என்பதால் மீட்பு பணியை உடனே துவக்கி இருப்பார்கள்; அதனால் உயிருக்கு போராடிய ஒரு சிலர் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். ஆனாலும், இந்த நிமிடம் வரை மரணமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டுகிறது. ஆயிரம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

ஆழ்ந்த இரங்கல்.

வழக்கமாக அரசாங்கம் என்ன பதில் சொல்லும் என்பது நமக்குத் தெரியும்.

விசாரணை, பொறுப்பான ஒரு சில அதிகாரிகள் சஸ்பெண்ட், நிவாரணத் தொகை அறிவிப்பு என வழக்கமான நிகழ்வுகளைக் கடத்தி விட்டு இரண்டொரு நாளில் அடுத்த வேலையைப் பார்க்கும்.

இதையெல்லாம் தாண்டி தார்மீகப் பொறுப்பு என்று ஒன்று உள்ளது; அதை ஏற்கும் தர்மம் எல்லாம் இன்றைய அரசியல் வாதிகளின் சித்தாந்தத்தில் உண்டா என்பது தான் கேள்விக் குறி தான்.

அரியலூர் ரயில் விபத்தின் போது தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ததை நினைவு கூற வேண்டும்.

அத்துடன், இனி இம்மாதிரி ஆகப்பெரும் அலட்சியங்கள் இல்லாத நிர்வாக கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் முனைந்திட வேண்டும்.

ஏழைகள் என்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு நம்பி இருப்பது ரயில்வேத் துறையை மட்டும் தான்.

ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்காமல், தொழில்நுட்ப ரீதியில் இன்னும் வளர்த்து மக்களுக்கான சேவைகளை துளியும் குறையின்றி வழங்கிட அரசாங்கம் முனைந்திட வேண்டும்.

#trainaccidents
#railway