Powered By Blogger

23 ஆகஸ்ட், 2023

நிலவில் இந்தியா

 

நம் நம்பிக்கை வீணாகவில்லை. நிலவில் இந்தியா கால் பதித்தது. சந்திரயான் 3 இன்று 23/8/23 மாலை சரியாக 6 04க்கு திட்டமிட்டபடி நிலவில் இறங்கியது. 




சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக
விதை போட்டும்
இந்தியா உலக நாடுகளுக்கு நிகராக
விருட்சமாக உயர
ஆக்கப் பூர்வத் தளங்களை
முன்னெடுத்து வைத்தவர்
பண்டித ஜவஹர்லால் நேரு!
அறிவியலில் முன்னேற்றம் பெறவும்
உலக அரங்கில்
இந்தியா தலை நிமிரவும்
வித்திட்டவர் அவர்.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி
நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமிட்டு
இந்தியா படிப்படியாக
உயர்ந்திட வழிவகை செய்ததை
மறுக்க இயலாது.
சந்திரயான்
வெற்றி கூட
நேரு அவர்கள் வித்திட்டது தான்
என்றால்
அது மிகையில்லை.
அத்துடன் இஸ்ரோவின் விஞ்ஞானிகளின்
அயரா உழைப்பும்
கூரிய அறிவுத்திறனும் இந்தியாவை உலக அரங்கிலே
அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.
ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும்!

12 ஆகஸ்ட், 2023

சாதிப் படி


நாங்குநேரியில் இடைநிலை சாதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் பட்டியலின மாணவன் வீட்டிற்குள் புகுந்து தாக்கிய நிகழ்வு

படியில் ரத்தம்

படித்தும் ஏன் இந்த குரூரம்

படிப்பில் என்ன குற்றம்


சாதிப் படியில் ஏறினால் 

இது தான் மிச்சம்

சாதி மிடுக்கைத் துக்கியெறிந்து விட்டு
சாதிக்கப் படியேறு


சாதிய ரத்தம் தோய்ந்த உன் கைகளைக் கழுவு

கறைகளோடு உன் குறைகளும் கரையட்டும்

கரையேறி வா
உனக்கான உலகம் விரிந்து கிடக்கின்றது


இது ஆயுதம் சுமக்கும் வயதல்ல;
இயற்கையைச் சுகிப்பதற்கானது

இது வசைபாடும் பருவமல்ல;
இசையோடு இழையோடும் காலம்
உன் பின்பக்கம் ஊசி போட்டால் கூட
கதறி அழும் பருவமிது;
உன் சகத் தோழனின்
உயிர் மாய்க்கும் வெறியை யாரிடமிருந்து கற்றாய்?

உனக்கான இலட்சிய வெளி
ஒளி மிகுத்து பரவிக் கிடக்க
நீயோ
சாதியம் எனும் மலத்தை
ஏகாந்தமாய் மிதித்துக் கடக்கிறாய்

உன் வீட்டுப் பெரியவர்கள் எல்லாம்
சாதித் தீயைச் சுமந்து சுமந்து
மனித இனத்தை எரித்துக் கறுக்கினர்

நீயோ அவர்களைப் பார்த்துப் பார்த்து
பெருமிதம் கொள்கிறாய்

இது பெருமிதம் அல்ல,
உன் நாவில்
நீயே தடவிக் கொண்ட நச்சு


அரசியல்வாதிகளுக்கெல்லாம்
நீ ஓட்டு வங்கி; அவ்வளவு தான்
நீ பிச்சை எடுத்தாலும்
அவர்களுக்கு ஓட்டுப் போட மட்டுமே நீ தேவை
அடுத்த ஐந்தாண்டுக்கோ
உன்னை சீண்டுவார் இல்லை


உன் மனிதத்தைக் கொலை செய்வதே
உன் சாதிய புத்தி
புத்தியை சரி செய் எல்லாம் சரியாகும்
இல்லையெனில்,
உன் சாதியமே உன்னை வீழ்த்தும்.
கூர் நோக்கு இல்லச் சிறைகளில் குறுக வைக்கும்.


உன்னையும்

உன் சாதியையும் உலகம் காரியுமிழும்.


20 ஜூன், 2023

மனிதம் சிறக்க திருக்குறள்

திருக்குறளை ஆழ்ந்து படிக்கும் வாய்ப்பு என் அகவை அறுபதைத் தொடும் இத்தருணத்தில் தான் எனக்கு முழுமையாக அமையப்பெற்றது.

பள்ளிப் பருவ காலத்தில் 'அகர முதல' எனத் தொடங்கி மனப்பாடச் செய்யுளாக சொற்ப எண்ணிக்கையிலான குறள்களைப் படித்ததோடு சரி. மனதினுள் குறள் பொதிந்த அளவிற்கு அதன் பொருள் பதிந்திடாத நிலையோடு கடந்த காலம் அது. இளம் வயதில் ஒரு கட்டத்திற்கு மேல், பல திசைகளில் இருந்தும் திருக்குறள் சார்ந்த ஆக்கங்கள் நம்மைக் கடந்து பயணித்ததை மறக்கவியலாது.

அந்நாளில், எங்கிருந்தாவது குறளோ அல்லது குறள் சார்ந்த படைப்போ நம் புலன்களைத் தழுவாது இருந்ததில்லை எனலாம்‌.

திருக்குறள் எனும் ஈரடிச் செய்யுள் இவ்வுலகின் எல்லா அக மற்றும் புறவெளிகளிலும் செலுத்திய ஆளுமை, தமிழனின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றது.

திருக்குறள், சங்க இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்கள் திரட்டிற்குட்பட்ட குறள் வெண்பா வகையினாலான 133 அதிகாரங்களாகவும், ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுட் பாக்கள் வீதம், ஆக 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டதாகும். திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பால் பகுப்புகளாக அமையப்பெற்றுள்ளது. திருக்குறள் மானுடவியலின் அறநெறிகளை நீக்கமற வலியுறுத்தியும் வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பகுத்து சொல்லப்பட்ட மிகவும் தொன்மையான பெருமை மிகும் படைப்பாகும்.

இந்நூல், பொதுத் தன்மையோடும் மதச்சார்பற்றதுமான தன்மையுடையதாகக் கருதப்படுவதே இதன் சிறப்பம்சமாகும். இத்தகு சிறப்புடைய குணநலன்களால் தான் திருக்குறள் உலகில் பொது மொழியான ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இன்று வரையிலும் உலகெங்கிலும் புகழ் பெற்ற ஒரே நூலாகத் திகழ்ந்து வருகின்றது.

உலகமே போற்றும் திருக்குறளை தமிழராகப் பிறந்திருந்தும், இளம் வயதில் ஐயமறக் கற்காததால் நாம் இழந்தவை குறித்து மனம் வருந்துவதை மறுக்க இயலாது.

சரி, போகட்டும்; இப்போதாவது அதை முழுமையாகக் கற்கவும் ஆராய்ந்தறியவும் வாய்ப்பு கிட்டியது குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

திருக்குறளுக்காக உரை எழுதிய அறிஞர் பெருமக்கள், திருக்குறள் சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட பேரறிஞர்கள், திருக்குறளை மையமாக வைத்து பல்கலைப் படைப்புகளை உலகுக்குத் தந்த பெருமை மிகும் படைப்பாளர்கள், இசை வடிவம் தந்த கலைஞர்கள், பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகெங்கிலும் திருக்குறள் பெருமையை பறை சாற்றிய உலகளாவிய பெருமக்கள் அனைவரையும் வியந்து நோக்குகிறேன்; அளவிடற்கரிய சாதனைகளுக்காக அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

முதன்முதலில் ஒரு குறளை எப்போது படித்தோம் என்பது நினைவில் இல்லை. ஒவ்வொரு குறளும் எங்ஙனம் நம் நினைவில் அகலாது ஒட்டிக் கொண்டு நம்மோடே வாழ்கிறது என்பதை ஆராய்ந்தறியவே இயலாததென்பது வியப்புக்குரியது.

ஒவ்வொரு குறளுமே மனிதகுலத்திற்கான வாழ்வு நெறிமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. மனித சமுதாயத்தின் அங்கங்களான இல்வாழ்க்கை, அரசியல், பொதுவாழ்வு என எல்லாவற்றையும் நெறிப்படுத்தும் வகையில் பாங்காய் அமைந்திருப்பதைப் பார்க்கும் போது, அதை இயற்றி அளித்துள்ள திருவள்ளுவர் எத்தகைய மாண்புமிக்க மனித வடிவம் என்பதை உணரலாம்.

திருக்குறளின் சாரத்தை முற்றாக பிறழ்வின்றி கடைபிடிக்கும் ஒருவரால் இந்த உலகை வெல்ல இயலும் எனில் மிகையில்லை. அத்தகைய ஒருவர் காணக்கிடைத்தல் அரிது என்பதும் வியப்பில்லை. ஏனெனில், நாம் சமுதாய ஒழுங்கு, கலாச்சாரம், பண்பாடு, அரசியல் நேர்மை ஆகியவற்றுள் ஒருவித எதிர்மறை வலைக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். அதனின்று நம்மை விடுவித்துக் கொள்ள இயலா தொலைவில் பயணிக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆயினும், இந்த குறள்கள் தினந்தோறும் நம்மை அழைத்துக் கொண்டு தானிருக்கிறது.

நன்னெறியைப் புகட்டவும், நேரிய வாழ்வு கொள்ளவும், நீதி பிறழாத மனத்தோடு ஆட்சி வழங்கவும், தலைசிறந்த இல்வாழ்க்கையை சிரமேற்கவும் குறள்கள் நம் அருகிலேயே நிலைநின்று குரல் கொடுத்தவாறே நம்மை ஓயாது அழைத்துக் கொண்டிருக்கிறது.

திருவள்ளுவர் வகுத்துத் தந்த பாதையினூடே பயணித்தல் என்பதே நம் இலட்சியத்தை ஈடேற்றும் உன்னத வழியென்றால் அது மிகையில்லை.

வாழ்க திருவள்ளுவர்! வளர்க திருக்குறள் புகழ்!!

புகழ் வளரும்…✍


05 ஜூன், 2023

அரசியல் பேசுவோம்

காலையில் எழுந்தவுடன் குழாயில் தண்ணீர் வரவில்லை. காலைக் கடன்களுக்காக கால் பக்கெட் தண்ணீர் கூட இல்லை.

சரி, சிறிது நேரம் காத்திருக்கலாம் என முகத்தைக் கழுவி விட்டு முகநூலில் சமூகப் பொங்கல்களை ஆற்றலாம் என்று திறந்தால், "விநாயகர் சிலை அகற்றம்", "ஒடிசா ரயில் விபத்து ஒரு சதி" என ஒரேயடியாய் காவிக் கசடுகள் கண்ணைக் கட்டின.

இடையிடையே சேலத்து ஆணவக் கொலை நாயகன் குறித்த அரற்றுதல்கள். அவரை குறிப்பிட்ட சமூகத்தின் ஏகோபித்த காவலராக (மாவீரனாம்: அடேய்!) சித்தரித்து, அவர் மீண்டும் சாமுராய் கணக்காய் வெளியே வந்து சா'தீய' சமூகப் பணி ஆற்றுவார் என ஒரு சாரார் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் தீர்ப்புரை வாசிக்கப்பட்ட போதே அவருடைய சா'தீய' வெறி சரிந்து விழுந்து விட்டது என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை போலும்.

இப்போதெல்லாம் சமூகத்துக்காக பொங்கி முகநூல் வருகிறவர்களில் சாதிக்காகவும் மதத்திற்காகவும் கம்பு சுத்துகிறவர்களே அதிகமாகத் தெரிகிறார்கள்.

சாராயக்கடை துயரத்தைப் பற்றி எழுதினால் இவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்; மதச்சார்பு வெறுப்பு அரசியல் பற்றி எழுதினால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பொதுக்குழு அரசியல் நடத்தி பிழைப்பு நடத்துபவர்களை பற்றிப் பேசினால் அந்த ஆட்கள் என் பொடனியில் அடிக்க வருகிறார்கள்.

பாருங்கள் நடுநிலையானளராக இருப்பதில் எத்தனை கொடுமை என்று, எந்த பக்கம் திரும்பினாலும் குத்து விழுகிறது.

பொதுவாக, அரசியல்வாதிகளை வெறுக்க வைத்தது நான் வேலை பார்த்த துறை தான்; அலுவலகத்துள் வந்த நிமிடத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வரை கறை வேட்டிகளோடு கட்டிப் புரண்டு விட்டு வீட்டுக்கு வந்து தூங்கினால், தூக்கத்தில் அதிகாரிகள் கனவில் வந்து அவர்களும் போதாக்குறைக்கு அரசியல் துவேஷம் செய்வது நினைவிலாடியது.

கம்யூனிச சித்தாந்தம் கொஞ்சம் பிடிக்கும் என்றாலும், இங்கே கம்யூனிஸ்டுகளை பிடிப்பதில்லை (நல்லகண்ணு அய்யா உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர)

என்னை போன்ற நடுநிலையாளர்கள் வேறு என்னதான் செய்வது?

சாதியையும் மதத்தையும் வைத்துக்கொண்டு நாட்டை பாழாக்குபவர்களிடம் விலகிச் செல்வதா? இல்லை, அவர்களிடத்தே போராடிப் பார்த்து விடுவதா?

பலரும் இங்கே, தன் சாதியை உயர்த்திப் பிடித்து தாமே உயர்ந்தவர் என்றும், பிற மதத்தவரை இழிவு செய்வதன் மூலம் நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்துவதாகவும் போலியான சித்தாந்தத்தை வகுத்து வைத்திருக்கின்றனர்.

இதனால், பிரிவினைவாதமும் வெறுப்பு அரசியலுமே ஓங்கி நிற்கிறது.

அதன் விளைவாக எல்லா சமூகமும் நிம்மதியற்றுக் கிடப்பதோடு நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்ற அறிவே இல்லாதவர்களாகத் திகழ்கின்றனர்.

அவர்களுக்கு தம் கருத்தில் நியாயம் தர்மம் இருக்கிறதா இது சமூகவெளியில் அறம் சார்ந்த விளைவுகளை பதிப்பிக்குமா என்பது குறித்தெல்லாம் துளியும் கவலை கிடையாது.

இவர்களுக்கு மத்தியில் யாரையும் தொந்தரவு செய்யாமல் கவிதை இலக்கியம் கலைகள் பெண்கள் குழந்தைகள் கல்வி சுய முன்னேற்றம் சமூக வளர்ச்சி என நேர்மறை பதிவுகளை எழுதி தாம் உண்டு தம் வேலை உண்டு என தன் போக்கில் பயணிப்பவர்கள் மிகக் குறைவே.

அவர்களுமே தப்பித் தவறி அறம் தவறிய சாதிய வெறி மதத் துவேஷம் குறித்து பதிவுகளை எப்போதாவது நேர்மையான வகையில் இட்டால், அவைகளும் மார்க்கின் அறமில்லா அல்காரிதச் சித்தாந்தத்தால் அநியாயமாக கீழே தள்ளப்பட்டு விடுகின்றன.

(இந்தக் கட்டுரையில் கூட நான் community standard -ஐ மீறிய வகையில் எத்தனை வார்த்தைகளை எனக்குத் தெரியாமலே போட்டு இருப்பேன் என்று தெரியாது.)

அடுத்தவர்களின் அழுக்கை விமர்சிக்க வருபவர்கள் அவர்கள் மீது ஒட்டி இருக்கும் அழுக்கைப் பற்றி கவலை கொள்வதில்லை.
அது என்னவோ அவர்களின் தார்மீக உரிமை என்று அழிச்சாட்டியமாய் நின்றாடுகிறார்கள்.

என்னை ஒரு நண்பர் கேட்டார் நீங்கள் இடதா? வலதா? என்று!

நான் சொன்னேன், நான் இடதும் இல்லை வலதும் இல்லை; நடு சென்டர் (!?) என்றேன்.

ஆம். நான் ஒரே அடியாய் வலது பக்கமோ இடது பக்கமும் சாய்பவன் அல்லன். வலதின் அடையாளம் கொண்டவர் அறத்தோடு திகழ்வாறானில் அவரை பாராட்டத் தவறுவதில்லை.

அதேபோல் இடது என தம்மை விளித்துக் கொண்டு களவு செய்வாரானால் அவரைக் கண்டிக்கவும் தயங்குவதில்லை.

அதனால்தான், சொன்னேன் நான் வலதும் இல்லை இடதுமில்லை, நடுவாளன் என்று!

இங்கே சமூக ஊடகங்களில் இது போன்ற நடுநிலை சிந்தை கொண்டவர்கள் நிறைய பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வலது ஆசாமிகளாலும் இடது ஆசாமிகளாலும் மத்தளம் போல் நாளுக்கு நாள் அடிபட்டேக் கிடக்கிறார்கள்.

குறைந்தபட்சம் கருத்து சொல்பவனை வார்த்தைத் தாக்குதலை கொண்டு வீழ்த்த நினைப்பது அறம் கிடையாது.

அவன் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் இருந்தால் நாகரீகமாக எழுத்து வடிவில் முன் வைக்க வேண்டும். அது இயலாது என்றால் திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போய் விட வேண்டும்.

நாம் அன்றாடம் புழங்கும் ஒரு சொல் - "பொது ஜனம்".

இந்தப் பொது ஜனம் என்பது நடுநிலையாளரைத் தவிர வேறு எவரும் இல்லை.

இவர்கள்தான் இடதாயினும் வலதாயினும் தவறுகளை தயக்கமின்றி சுட்டிக் காட்டுபவர்கள்.

இவர்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் காரணிகளை உருவாக்குகிறார்கள்.

இவர்கள் தான் நாட்டின் இறையாண்மையை அறத்தோடு காக்க முயற்சிப்பவர்கள்.

நடுநிலையாளர்களை புண்படுத்தாமல் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

அவர்கள் அமைதியானவர்கள் தான்; ஒரு கட்டத்திற்கு மேல் அந்த அமைதியும் தன் கட்டுடைத்து சீற்றம் கொண்டுவிடும்.

04 ஜூன், 2023

அலட்சியம் ஆபத்து





ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து என்பது மிகக் கொடுந்துயரம்!

இது ரயில்வே துறையின் உச்சக்கட்ட அலட்சியம் தவிர வேறில்லை!

விபத்து நடந்த நேரம் இரவு 7 மணி என்பதால் மீட்பு பணியை உடனே துவக்கி இருப்பார்கள்; அதனால் உயிருக்கு போராடிய ஒரு சிலர் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். ஆனாலும், இந்த நிமிடம் வரை மரணமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டுகிறது. ஆயிரம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

ஆழ்ந்த இரங்கல்.

வழக்கமாக அரசாங்கம் என்ன பதில் சொல்லும் என்பது நமக்குத் தெரியும்.

விசாரணை, பொறுப்பான ஒரு சில அதிகாரிகள் சஸ்பெண்ட், நிவாரணத் தொகை அறிவிப்பு என வழக்கமான நிகழ்வுகளைக் கடத்தி விட்டு இரண்டொரு நாளில் அடுத்த வேலையைப் பார்க்கும்.

இதையெல்லாம் தாண்டி தார்மீகப் பொறுப்பு என்று ஒன்று உள்ளது; அதை ஏற்கும் தர்மம் எல்லாம் இன்றைய அரசியல் வாதிகளின் சித்தாந்தத்தில் உண்டா என்பது தான் கேள்விக் குறி தான்.

அரியலூர் ரயில் விபத்தின் போது தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ததை நினைவு கூற வேண்டும்.

அத்துடன், இனி இம்மாதிரி ஆகப்பெரும் அலட்சியங்கள் இல்லாத நிர்வாக கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் முனைந்திட வேண்டும்.

ஏழைகள் என்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு நம்பி இருப்பது ரயில்வேத் துறையை மட்டும் தான்.

ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்காமல், தொழில்நுட்ப ரீதியில் இன்னும் வளர்த்து மக்களுக்கான சேவைகளை துளியும் குறையின்றி வழங்கிட அரசாங்கம் முனைந்திட வேண்டும்.

#trainaccidents
#railway

18 மே, 2023

சாராயம் எனும் பிணந்தின்னி

1970-கள்...
அப்போது எனக்கு ஏழெட்டு வயதுக்கும் மேல் இருக்கும்.
முழுப் பரீட்சை முடிந்து விடுமுறையில் அம்மா என்னை பட்டுக்கோட்டையை அருகே ஒரு கிராமத்திலுள்ள என் மாமன் வீட்டிற்கு அழைத்துச் செல்வாள்.
அப்போது மதுவிலக்கு இருந்ததா என்பது என் அறிவிற்கு எட்டவில்லை.
சாராயக்கடைகள் இருந்தமை பற்றி என் நினைவில் இல்லை.
நான் பார்த்ததுமில்லை.
மொடாக் குடிகாரரான என் அப்பா கள்ளுக்கடையில் குடித்துவிட்டு வருவதை பற்றி என் அம்மா சொல்லி இருக்கிறார்.
மாமா பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தார். வீட்டின் எதிரிலேயே பள்ளிக்கூடம்.
மாமா வீட்டின் பக்கத்தில் ஒரு வயதான பாட்டி குடி இருந்தார்.
அந்த வீட்டில் சாராயம் காய்ச்சுவதைப் பற்றி பேசிக் கொண்டது நினைவில் இருக்கிறது.
ஒரு நாள் காலை நேரம்... அந்த சாலையில் இரண்டு போலீஸ்காரர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
முன்பக்கம் கத்தி போல் விறைப்பாய் நீண்டபடியான காக்கிச் டவுசர்! தலையில் சிவப்பும் நீலமும் கலந்த கூர் வைத்த தொப்பி. கையில் நான்கடி நீளத்தில் பிரம்பு.
முழங்காலை தொடும் அளவிற்கு காக்கி நிற சாக்ஸ், காலில் யானைக்கால் சைசுக்கு ஷூ அணிந்தபடி அவர்கள் இருவரும் நடந்து வந்ததை பார்த்த என் மாமா எங்கள் காதுகளில் கிசுகிசுத்தார், "போலீஸ்காரங்க சாராயக்கேஸ் பிடிக்க வந்திருக்காங்க"
இரண்டு போலீஸ்காரரும் நேராக அந்த பக்கத்து வீட்டு பாட்டி வீட்டுக்குள் நுழைந்தார்கள். நானும் என் மைத்துனனும் ஏதோ அது பற்றி சத்தமாக பேச என் மாமாவும் அத்தையும் எங்கள் வாயை பொத்தினார்கள்...
கொஞ்ச நேரத்திலேயே பாட்டி வீட்டிற்குள் இருந்து கூக்குரல் கேட்டது!
என்னவோ பாட்டி சத்தமாய் பேசினாள்.
போலீஸ்காரகள் வீட்டின் உள்ளே இருந்தபடி பானைகளைத் தூக்கி வெளியே வீசினார்கள்.
உள்ளே நடந்தது என்னவென்றால் பாட்டி பரண்மீது வைத்திருந்த விதை நெல் பானையை ஒரு போலீஸ்காரர் தன் பிரம்பால் சாராய ஊறலாக இருக்குமோ என்று ஓங்கி குத்தி இருக்கிறார். விதைநெல் முழுவதும் பொலபொலவென அந்த போலீஸ்காரர் தலை மீது கொட்டியது.
போலீஸ்காரருக்கு என்ன ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை. இவள் சாராயம் காய்ச்சி விக்கிறவ தானே? ஊறலை எங்கு தான் வைத்திருப்பாள்? என்று ஆத்திரத்தோடு அங்கு இருந்த எல்லா பானைகளையும் உடைத்து வெளியே தூக்கி எறிந்தார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவரது மகனும் பேரனும் அங்கு ஓடி வந்தார்கள். இருவரும் போலீஸ்காரர்களோடு சண்டையிட்டார்கள்.
"பாட்டி இப்போது சாராயம் காய்ச்சுவது இல்லை, ஏன் அவரை தொந்தரவு செய்கிறீர்கள்?" என்று சத்தம் போட்டார்கள்.
ஆனால், போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் விட்டபாடில்லை.
வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்,
கொள்ளைப்புறத்தே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு இடத்தில் காலடியில் அமுங்குவது போல் தெரிந்திருக்கிறது. உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்த்தால் உள்ளே சாராய ஊறல் பானைகள்.
உடனே அந்தக் காவலர்கள் பாட்டியின் பேரனையும் பையனையும் பிரம்பால் ஆளுக்கு இரண்டு சாத்து சாத்தினார்கள்.
அவர்கள் வலியால் துடித்துக் கத்தினார்கள். வாயடைத்துப் போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டார்கள்.
சாராய ஊறலை சாலையோரத்தில் கொட்டி அதன் மீது மண்ணையும் குப்பைகளையும் அள்ளிப் போட்டுவிட்டு, பானையை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் பானை தான் அவர் சாராயம் காய்ச்சியதற்கு தடய சாட்சியாக நீதிமன்றத்தில் சொல்வார்கள் போலும்.
அப்போதெல்லாம் காவல் நிலையங்களில் இப்போது வழக்குகளில் சிக்கிய வாகனங்களை நிறுத்தி இருப்பது போல், சாராய ஊறல் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
பக்கத்து வீடான என் மாமாவிடம் போலீஸ்காரர்கள் வந்து "இந்த வீட்டில் இந்த பாட்டி மட்டும்தான் குடி இருக்கிறாரா அவரது மகன் பேரன்களோடு சேர்ந்து இருக்கிறார்களா?" என்று கேட்டு ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். என் மாமா "பாட்டி மட்டும்தான் இங்கு இருக்கிறார், அவரது பையன் மருமகள் மற்றும் பேரன் தனியாக இருக்கிறார்கள்" என்று சொன்னதும் அவர் பையனையும் பேரனையும் விட்டுவிட்டு பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள்.
ஊழல் போடப்பட்டிருந்த பானையை பாட்டி தலையின் மீது தூக்கி வைத்து "இதை சுமந்து கொண்டே ஸ்டேஷனுக்கு வா" என்று நடக்க வைத்தே அழைத்துச் சென்றார்கள்.
இந்தக் காட்சி எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது.
அதன் பிறகு காலங்கள் உருண்டோட...
என் அப்பா தஞ்சாவூரில் சாராயக் குடியால் இறந்து மடிந்த பிறகு 1980களில் என் மாமாவின் ஆதரவோடு இந்த ஊருக்கே புலம் பெயர்ந்தேன்!
அப்போதும் அந்த ஊரில் சாராயம் காய்ச்சும் வழக்கம் இருந்ததைக் கண்ணுற்றேன்.
நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர்ச்சாரியில் 16, 17 வயது பையன்கள் உட்பட பலரும் சாராய ஊறல் போட்டு வீட்டிலேயே காய்ச்சி அங்கேயே விற்பனை செய்வார்கள்.
போலீஸ் நிலையத்திலிருந்து காவலர்கள் வரும்போது வழக்கிற்காக சுழற்சி முறையில் மாதம் ஒரு முறை ஒவ்வொருவராக அழைத்துச் செல்வார்கள்.
அப்போதெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் ஒரு வாரத்தில் வெளியே வருவார்கள். சில பேர் அபராதம் கட்டி வெளியே வந்ததாய் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிறையில் இருந்து வந்த பிறகு மீண்டும் அதே சாராயம் காய்ச்சும் வேலை தான்.
இந்த முறை காவல்துறையினர் வரும்போது வேறு இருவரை வழக்கு எண்ணிக்கைக்காக பிடித்துச் செல்வார்கள்!
இது பற்றி எல்லாம் ஊரில் யாரும் கவலைப்பட்டுக் கொண்டதாக எனக்கு நினைவில் இல்லை.
குடியால் கெட்டழிந்த குடும்பமாகையால் நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்; ஆனால் என்னால் எதுவும் எதிர்வினை ஆற்ற இயலாத சூழல்.
காரணம், அந்த ஊரில் நூற்றுக்கு 90 பேர் குடிக்கிற ஆட்கள். சாதாரணமாக பக்கத்தில் நின்றாலே பேசும் போது சாராய வாடை 'குப்'பென்று வீசும்.
காலையில் வெள்ளையும் சொள்ளையுமாக நல்லவர் மாதிரி பேசிக் கொண்டிருப்பவர் மாலையில் ஏதாவது வாய்க்கால் ஓரத்தில் போதையில் சகதியோடு சகதியாய் புரண்டு கிடப்பார்.
இப்படி சாராயப் பிரியர்கள் ஊருக்குள் மந்தை மந்தையாய் பெருகிக் கிடக்க காய்ச்சி விற்பவர்களுக்கு கொண்டாட்டம் தானே?
காவல்துறையினர் எளிதில் பிடித்து விடாமல் இருக்க ஊர்க் கடைசியில் காட்டாற்றின் கரையில் சாராயம் காய்ச்சுவதை நேரில் கண்டிருக்கிறேன்.
போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்கு அவர்கள் ஒரு உத்தி வைத்திருந்தார்கள்.
எங்கள் ஊர் அதிராம்பட்டினம் காவல் சரகத்தில் வரும். அங்கிருந்து காவலர்கள் தேடி வரும் போது எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வேறொரு காவல் நிலைய எல்லைக்குள் ஓடி விடுவார்களாம்.
அதனால் அவர்களைப் பிடிக்க முடியாது போகுமாம்.
அதை, "போலீசுக்கு டிமிக்கி கொடுத்தோம்" என பெருமையோடு பேசிக்கொள்வார்கள் அந்த சாராய விற்பன்னர்கள்!
ஒரு கட்டத்தில் சாராயம் விற்பவர்களை சில காவல்துறை அதிகாரிகள் கடுமையாக ட்ரீட்மென்ட் செய்து பலரை ஒழித்துக் கட்டியும் சிலரை திருத்தியும் விட்டிருக்கிறார்கள்.
அவர்கள் மறுவாழ்வு பெற வங்கியில் லோன் வாங்கி கொடுத்த காவல்துறை அதிகாரிகளும் உண்டு.
அந்த கிராமத்தில் பஞ்சாயத்தார் மற்றும் நற்பணி மன்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாராயம் காய்ச்சுபவர்களை கண்டித்து அத்தொழிலில் இருந்து விடுபடச் செய்தார்கள்.
பிறகு அரசால் ஏலம் விடப்பட்ட அதிகாரப்பூர்வ சாராயக்கடைகள் பெருகப் பெருக கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் எண்ணிக்கை என்னவோ குறைந்தே போனது.
பிறகு சினிமாவில் சாராயம் காய்ச்சுபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து எம்எல்ஏ ஆனவர்கள் கல்வித்தந்தை ஆனார்கள் என்றெல்லாம் காட்டப்பட்டது வேறு கதை.
ஒன்றிரண்டு சாராய மன்னர்கள் பிற்காலத்தில் பெரும் அதிகார பதவிகளில் கோலொச்சியதையும் நாம் கண்டது உண்மையிலும் உண்மையே.
தெருவுக்குத் தெரு அரசாங்கமே சாராயக்கடைகளைத் திறந்து வைத்திருக்க, இன்னமும் கள்ளச்சாராயம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரங்கேறிக் கொண்டிருப்பது பயமாகத்தான் இருக்கிறது.
டாஸ்மாக்கில் விற்கப்படும் சாராயத்தின் தரம் குறித்து நிறைய விவாதங்கள் ஒருபுறம்.
சாராயம் விற்று வரும் பணத்தில் அரசாங்கம் நடத்த பெருமளவில் உதவுகிறது என்று ஒரு கூற்று மறுபுறம்.
இடையில் கள்ளச்சாராயம் என்ற ஒரு விஷயத்தை கண்டு பதறும் அரசாங்கம்.
ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து குடிக்கும் அளவிற்கு பக்குவப்பட்டு போன நம் சமூகம்.
குடியால் உடலளவிலும் மனதளவிலும்
எல்லா பாதிப்பிற்கும் உள்ளாகி கடைசியில் மரணிப்பதோடு ஒரு பாவமும் அறியாத குடும்பத்தை நிலைகுலையச் செய்திடும் இந்த நிலைமைக்கு யார் பொறுப்பாவது?

14 மார்ச், 2023

இரோம் ஷர்மிளா - இரும்புப் பெண்மணி





"மணிப்பூரின் இரும்புப் பெண்மணி" 
இரோம் ஷர்மிளா


"மணிப்பூரின் இரும்புப் பெண்மணி" என்று அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா, வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த ஒரு முக்கிய மனித உரிமை ஆர்வலர் ஆவார். அவர் தனது 28 வயதில் 2000 ஆம் ஆண்டு தொடங்கிய சுமார் 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்திற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்றார். சர்மிளாவின் எதிர்ப்பு, சர்ச்சைக்குரிய ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்திற்கு (AFSPA) பதிலளிக்கும் வகையில் இருந்தது.

AFSPA ஆனது மணிப்பூர் உட்பட சில மோதல்கள் நிறைந்த பகுதிகளில் செயல்படும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்கியது. இந்த அதிகாரங்களில் பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்தல், கண்டால் சுடுதல் மற்றும் அனுமதியின்றி தேடுதல் நடத்துதல் ஆகியவை அடங்கும், இது மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் பிற மீறல்கள் பற்றிய பல குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது.

ஐரோம் ஷர்மிளா AFSPA க்கு எதிராகவும் அதை திரும்பப் பெறக் கோரியும் அகிம்சைப் போராட்டத்தின் ஒரு வடிவமாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஏறக்குறைய 16 ஆண்டுகளாக, அவள் உயிருடன் இருக்க அவ்வப்போது மருத்துவ தலையீட்டைத் தவிர வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ மறுத்துவிட்டாள். இந்த நேரத்தில், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டார் மற்றும் தற்கொலைக்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார், ஏனெனில் உண்ணாவிரதப் போராட்டங்கள் இந்தியச் சட்டத்தின் கீழ் தற்கொலை முயற்சியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகின்றன.




அவரது நீடித்த மற்றும் அமைதியான எதிர்ப்பு இருந்தபோதிலும், இந்திய அரசாங்கம் மணிப்பூரில் AFSPA ஐ ரத்து செய்யும் பிரச்சினையில் பெரிதும் அசையாமல் இருந்தது. ஆயினும்கூட, அவரது உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது, மணிப்பூர் மற்றும் நாட்டில் உள்ள பிற மோதல்கள் நிறைந்த பகுதிகளில் மனித உரிமைகள் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

2016 ஆம் ஆண்டில், இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், தீவிர உண்ணாவிரத முறையிலிருந்து வழக்கமான அரசியல் வழிமுறைகளுக்கு தனது செயல்பாட்டை மாற்ற விருப்பம் தெரிவித்தார். அமைப்பிற்குள்ளேயே மாற்றத்தை ஏற்படுத்த மணிப்பூரில் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார். இருப்பினும், அவரது அரசியல் முயற்சி எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை, மேலும் அவர் மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இரோம் ஷர்மிளாவின் அயராத அர்ப்பணிப்பு, அவரை வன்முறையற்ற எதிர்ப்பின் சின்னமாகவும், இந்தியாவின் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் நீதிக்காக நடந்து வரும் போராட்டத்தின் அடையாளமாகவும் ஆக்கியுள்ளது. அவரது கதை பலரை அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும், ஆட்சி மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கவும் தூண்டியது.

18 பிப்ரவரி, 2023

இவன் ராத்திரி




மெய் மறந்து ஆடுகிறேன்!
பரவசத் திளைப்பில்
என் பாதம் பணிந்த கூட்டத்தாரோடு
பயணிக்கும்
இவன் ராத்திரி!

அன்பேயான ராசனின்
மௌனப் பார்வையின் கண்முன்னே
எந்தன் ஆனந்த நடனம்

முழு இரவையும் விழுங்கி
சனத்திரளின் உள்ளத்துள் தீயை மூட்டி
அகண்ட மேடை நெடுகிலும்
பொங்கியெழும்
பரவசப் பிரவாகத்தைக் காணீர்!

இதோ
முதல் வரிசையில்
மேல்தட்டு டிக்கெட் வாங்கி வந்த
பணத் திமிங்கிலங்கள்
ஆனந்தத் திளைப்பில் மகிழ்ந்திருக்க...

அதோ
கட்டக் கடைசி வரிசையில்
வெள்ளை உடுத்தி
நீள் சிவப்புப் பொட்டிட்ட
என் பக்த மங்கைகள்
மொட்டைத் தலையாட்டி ரசித்திருக்க...

எல்லோரையும்
எந்தன் குதூகலச் சிரிப்பால்
அதிர வைத்து ஆடுகிறேன்

லட்சோப லட்சம் பன்னிறைக் கோடியாய்
என் பக்தாள்களின் பரவசத்தில்
திளைத்து ஆடுகிறேன்
ஆடித் திளைக்கிறேன்

திரைதனில் மேனி காட்டி மினுமினுக்கும்
பேரறிவு மங்கைகளை
கிள்ளி நகையாடிக் களிக்கிறேன்

வெள்ளைத் தோலும்
விரிந்த கண்ணுமாய்
மெல்லிடை நெளித்தாடும்
வண்ணக் கனவின் மங்கையவள் உள்ளம் சிலிர்க்க
பறந்தாடுகிறேன்

தன் வீடொழித்து
என் சிறைப்பறவைகளான
பக்தப் பதுமைகள் மட்டும்
இன்றொரு நாள்
சிரித்திருக்க
சிலிர்த்திருக்க
என் சிம்மாசனம் விட்டிறங்கி
வீதி நடம் புரிகின்றேன்

கோடிக் கண்கள்
உலகங்கும் எமை உற்று நோக்க
தொலைக் காட்சி வழியே
பக்திப் பாசறைத் திறக்கிறேன்

வனங்களை வளங்களைக்
காக்கவென்று
கொங்கு மலைச்சாரல் நின்று
நித்தம் தவம் செய்தும்
இனம் காக்கவென்று கூவியும்
கும்மாளமிட்டுக் களிக்கிறேன்

எனை அறிவு ஜீவியென
நம்பும் கூட்டம் பலவிற்கும்
தீட்சையளித்து
கோடிகளில் மிதந்து
கூத்தாடிக் குதிக்கிறேன்

எந்தன் கொத்தளத்தில்
நானே இறைவனின் மைந்தன்
நானே வனங்காக்கும் வடிவினன்
நானே யுகக் காவலன்
நானே மகா மகா குருவாவேன்

என் முன்னே
மூத்த முதல் குடியும்
பிரதமத் திலகங்களும்
வந்திங்கு பரவசந்தனில் திளைப்பர்,
பொய்யில்லை...

அடுத்தாண்டும்
இவன் ராத்திரி வரும்,
உலகாளும் மன்னவரும்
என்னோடு இசைந்தாடும்
பரவசம் கொள்வதைக் காண்பீர்!
ஆண்டுக்கு ஆண்டு
என் அவதாரம் பெருகிடல் காண்பீர்!